Hello India

மோடி குறித்து அவதூறு கட்டுரை! சைபர் கிரைமில் புகார்!

“மோடி எனும் கோமாளி” எனும் தலைப்பில் சவுக்கு சங்கர் என்ற புலனாய்வு செய்தித் தளம் நடத்தி வருபவர் கடந்த ஏப்ரல் 5ல் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அந்தக் கட்டுரை குறித்து தருமபுரி மாவட்ட பிஜேபி தலைவர் தருமபுரி சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். அந்தக் கட்டுரை இதோ…

புகாரின் நகல்

நாகரீக மனித சமூகம் ஒரு மிகப்பெரிய சிக்கலை சந்தித்துக் கொண்டிருக்கிறது.  ஐரோப்பாவின் பல முன்னேறிய நாடுகளே கொரோனா வைரஸை எப்படி கையாள்வது என்று விழி பிதுங்கிக் கொண்டிருக்கின்றன. சீனாவிலிருந்து பரவிய வைரஸை உலகின் பல நாடுகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  ஆனால், இன்றோ, சீனாவை விட அதிகமான இறப்பு விகிதத்தை நாடுகள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.  இந்தியாவும் மிக மோசமான ஒரு தாக்குதலை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

இந்தத் தாக்குதலை, மனித சமூகம் மொத்தமாக இணைந்து எதிர்த்து போராடினால் மட்டுமே வெல்ல முடியும் என்ற சூழல் உருவாகி இருக்கிறது.   மனிதகுலத்தில் நாம் இத்தனை நூற்றாண்டுகளாக அடைந்த விஞ்ஞான வளர்ச்சிகளை இந்த வைரஸ் தவிடுபொடியாக்கி வருகிறது.

அதிக மக்கள் தொகை இல்லாத, பெரும் பரப்பளவை கொண்ட இங்கிலாந்து போன்ற நாடுகளே கடுமையான நெருக்கடியில் உள்ளன.  இந்தியாவை போன்ற 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் பரவும் இந்த கொரோனா கடும் சேதத்தை ஏற்படுத்தக் கூடும். இந்த சவாலை ஒவ்வொரு நாடும் எப்படி எதிர்கொள்கின்றன என்பது அந்நாடுகளை ஆளும் தலைவர்களை பொறுத்தே அமைந்து வருகிறது.

சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா இந்த வைரஸை எதிர்கொள்ள கடுமையான தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.  மிகவும் விழிப்போடு இருந்திருக்க வேண்டும்.  ஆனால் ஒரு கோமாளி பிரதமராக வாய்த்ததினால் நாம் இன்னும் கடுமையான துன்பங்களுக்கு ஆளாகப் போகிறோம் என்ற அச்சமே மேலிடுகிறது.

இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பு 30 ஜனவரி அன்று வெளியானது.  சீனாவின் வூகான் மாநிலத்தில் இருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த நேரத்தில் சீனாவில் இந்த வைரசுக்கு 170 பேர் இறந்திருந்தனர்.  7700 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.  பிலிப்பைன்ஸில் முதல் நோயாளி அறிவிக்கப்பட்டார். அப்போதே கவனமாகியிருக்க வேண்டும். ஆனால் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்திய வருகையை சிறப்பிப்பதில்தான் தன் முழு கவனத்தையும் செலுத்தினார்.

மோடியை விட ஆகப்பெரும் கோமாளியான ட்ரம்ப்புக்கும் கொரோனாவின் தீவிரம் தெரியாமல், மோடி தன்னை வரவேற்க ஒரு கோடி பேரை திரட்ட உள்ளார் என்று பெருமை பேசிக்கொண்டிருந்தார். குஜராத்தில் மோடியும் ட்ரம்ப்பும் இணைந்து பங்கேற்க இருந்த கூட்டத்தை ஒரு பிரம்மாண்டமான நிகழ்வாக மாற்ற, மொத்த பிரதமர் அலுவலகமுமே பணியாற்றியது.

மற்றொரு  புறம், டெல்லியின் இஸ்லாமிய பகுதிகளின் மீது டெல்லி காவல்துறையின் உதவியோடு இந்துத்துவ ரவுடிகளின் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.  நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களின் இருப்பிடங்களும், வணிகமும் சூறையாடப்பட்டன. 50க்கு மேற்பட்டோர் இறந்தனர்.  இவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள்.   இவை அனைத்தும் காவல்துறை நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கும்போதே நடந்தது.

சிஏஏ / என்.ஆர்.சி சட்டங்களுக்கு எதிராக போராடியவர்களை தேசவிரோதிகளாக சித்தரிப்பதில் பிஜேபி தலைவர்கள் கடும் முயற்சியில் இருந்தனர்.  அதன் தொடர்விளைவே வன்முறை.

மார்ச் முதல் வாரத்தில் உலகின் பல நாடுகளில் கொரோனா பரவி அதன் வீச்சு அத்தனை எளிதில் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்த்திக் கொண்டிருந்தது.   மோடியும் அமித் ஷாவும், மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதில் தங்கள் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தனர்.

உலக சுகாதார நிறுவனம்  மார்ச் 11 அன்று கொரோனாவை பேரழிவை உருவாக்கும் நோய் என்று அறிவித்தது.   இரண்டு நாட்கள் கழித்து மத்திய சுகாதாரத்துறை “கொரோனாவால் நெருக்கடி இல்லை” என்று கூறியது.

இறுதியாக 19 மார்ச் 2020 அன்று மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.   இரண்டு நாட்கள் கழித்து பால்கனியில் நின்று கைதட்டுமாறும், பாத்திரங்களை அடித்து ஒலி எழுப்புமாறும் கேட்டுக் கொண்டார்.  இந்த தருணத்தில் இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உயிர்சேதம் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.   கனடா, ஜெர்மனி, போன்ற நாடுகளின் அதிபர்கள், ஊரடங்கினால் வேலையிழக்கும் தொழிலாளர்களுக்கும், ஆதரவற்ற ஏழைகளுக்கும் அரசு என்ன செய்யப்போகிறது என்பதை அறிவித்துக் கொண்டிருந்தனர்.   கனடா அதிபர் ட்ரூடு தனது உரையில், “உங்கள் ஒவ்வொருவர் பின்னாலும் கனடா அரசு இருக்கிறது.   மூன்று மாத சம்பளம் உங்களை தேடி வரும்.  தொழில்கள் மூடப்பட்டால் அரசு நிதி உதவி செய்யும்” என்று அறிவித்தார்.

மோடியோ, ஞாயிற்றுக்கிழமை கொரொனாவுக்காக லீவு விட்டு, பால்கனியில் கைதட்ட சொல்லிக் கொண்டிருந்தார்.   ஊரடங்கினால், ஏற்படும் பொருள் இழப்பு,, வேலையிழப்பு, இடம் பெயர்தல் ஆகியவற்றை சமாளிக்க அரசு என்ன செய்யப்போகிறது என்பதற்கான எந்த அறிவிப்பும் இல்லை.   இது தொடர்பான நிதி உதவி குறித்த அறிவிப்பும் இல்லை. அந்த சமயம் வரை, வெண்டிலேட்டர்கள், மருத்துவ கையுறைகள், இதர மருத்துவ உபகரணங்களை இந்தியா செர்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அமெரிக்காவில் கொரோனா தீவிரமாக பரவி வரும் சூழலில், அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணமும், அவற்றின் தேவைக்காக மருத்துவ உபகரணங்களை வாங்கி வருகின்றன.  இவற்றுக்கான தட்டுப்பாடுகள் ஏற்படுவதால், அமெரிக்காவின் ஒரு மாநிலம், இன்னொரு மாநிலத்தோடு போட்டி போட்டு, அதிக விலை கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோய் இந்தியாவில் தீவிரமாக பரவினால், நாம் அதிக விலை கொடுத்தால்கூட அவசர தேவைக்கு மருத்துவ உபகரணங்கள் கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

மோடி தனது உரையில், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.  ஆனால் அவரது இந்த பேச்சு எடுபடாமல் போனது.   அவர் கைதட்ட சொன்னதையும், மக்கள் முழுமையாக கடைபிடித்தார்கள்.   இந்தியா முழுக்க பல்வேறு அடுக்ககங்களில் மக்கள் வெளியே வந்து கரவொலி எழுப்பினர்.  பாத்திரங்களை தட்டினர்.   வட இந்தியாவின் பல பகுதிகளில் பாத்திரங்களை தட்டியபடி ஊர்வலம் சென்றனர்.  சமூக இடைவெளியை பற்றி அவர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

24 மார்ச் அன்று இரவு 8 மணிக்கு மோடி, நாடு முழுவதும் அன்று நள்ளிரவு 12 மணி முதல் ஊரடங்கு என்று அறிவித்தார்.  நள்ளிரவு முதல் சந்தைகள் மூடப்படும், அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்படும் என்று அறிவித்தார். நான் ஒரு பிரதமராக இந்த முடிவை எடுக்கவில்லை.   உங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினராக இந்த முடிவை எடுக்கிறேன் என்றார்.  குடும்பத்தின் எந்த மூத்த உறுப்பினர், குடும்பத்தினரை தேசிய நெடுஞ்சாலையில் 2000 கிலோமீட்டர்கள் நடக்க விடுவார் என்று தெரியவில்லை.

இது மோடி ஒரு குடும்ப உறுப்பினராக எடுத்த முடிவாக தெரியவில்லை.  மாறாக, எதிரி நாட்டினரை, எந்த அவகாசமும் கொடுக்காமல் திடீர் தாக்குதல் நடத்துவது போலத்தான் இது இருந்தது.  இந்த நடவடிக்கைக்கு முன்னால் மோடி, எந்த மாநில முதலமைச்சர்களோடும் கலந்து பேசவில்லை.  தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை.   திடீரென்று 4 மணி நேரத்தில் அனைத்தும் மூடப்படும் என்று அறிவித்தார்.  மோடி மத்திய அமைச்சரவையோடு கூட இதை கலந்தாலோசிக்கவில்லை என்று டெல்லி பத்திரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பண மதிப்பிழப்பை ரகசியமாக வைத்திருந்ததை கூட புரிந்து கொள்ள முடிகிறது.  நிரந்தர வீடில்லாமல், புலம் பெயர்ந்து வேறு மாநிலங்களில் வேலை பார்க்கும் கோடிக்கணக்கானோர் இருக்கும் ஒரு நாட்டில் எந்த முட்டாளாவது இதைச் செய்ய இயலுமா?

ஒரு கோடிக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட சிங்கப்பூரில் ஊரடங்கு உத்தரவை, அந்நாட்டின் பிரதமர் நான்கு நாட்கள் அவகாசம் கொடுத்து செயல்படுத்தினார்.

மோடியின் இரவு 8 மணி அறிவிப்பை தொடர்ந்து, அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன.   டெல்லி போன்ற மாநகரில், இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்து தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.   இந்தியாவின் பல பகுதிகளிலும் தொழிலாளர்கள் புலம் பெயர்ந்து லட்சக்கணக்கில் வாழ்கிறார்கள்.   மெட்ரோ ரயில் போன்ற கட்டுமான பணிகள் எந்த நகரத்தில் இருந்தாலும், அதில் பணியாற்றுபவர்கள் புலம் பெயர் தொழிலாளர்களே.   திடீரென்று ஒரு நாள் இரவு, நான்கு மணி நேரத்தில் அனைத்து பணிகளையும் நிறுத்தினால், அவர்களுக்கு யாரு ஊதியம் கொடுப்பார்கள் ?  எங்கே தங்குவார்கள் என்பது பற்றி துளியும் மோடிக்கு அக்கறை இல்லை.

மறு நாள் காலை முதல், டெல்லியிலிருந்து, சாரி சாரியாக மக்கள் பல்வேறு ஊர்களூக்கு கிளம்பினர்.  போக்குவரத்து இப்போதைக்கு வராது என்பதை தெரிந்து தேசிய நெடுஞ்சாலையில் கொளுத்தும் வெயிலில் நடந்தே பயணிக்க தொடங்கினர். உத்தரப் பிரதேசத்தின், அலிகர், லக்னோ, ஆக்ரா, கோரக்பூர், ராம்பூர் என பல்வேறு தொலைதூரங்களுக்கு கை குழந்தைகளையும், முதியவர்களும் கிளம்பினர்.  1947 பிரிவினைக்கு பிறகு, இத்தனை பெரிய இடம் பெயர்வு நடந்தது இதுவே முதல் முறை.

இப்படி புலம் பெயர்ந்து செல்பவர்களுக்கு, தூரம் அதிகம் என்பது தெரியும்.  செல்லும் வழியில் உணவோ, உறைவிடமோ கிடைக்கும் சாத்தியம் குறைவு என்பதும் தெரியும். சொந்த ஊரை சென்றடைந்தாலும், இவர்களுக்கு அங்கே பெரும் செல்வம் காத்திருக்கவில்லை என்பதும் தெரியும்.  அங்கேயும் வறுமைதான் என்பதும் தெரியும்.

குடும்பத்தை விட்டு பிரிந்து, உறவினர்களை விட்டு பிரிந்து எங்கோ ஒரு இடத்தில் இறப்பதை விட, சொந்த ஊரில் இறக்கலாம் என்றே அவர்கள் புலம் பெயர்ந்தனர்.

சில நாட்கள் கழித்து, புலம் பெயர்ந்தோர் தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்து செல்லும் செய்தி ஊடகங்களில் வந்த பின்னர், உத்தரப் பிரதேச முதல்வர் பேருந்துகளை அறிவித்தார்.   ஒரு சில நாட்கள் கழித்து,  அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டன.  சொந்த ஊர்களை நோக்கி பயணம் செய்தவர்கள் அந்தந்த இடங்களிலேயே நிறுத்தப்பட்டனர்.   அவர்களுக்கு உணவு வழங்கி தங்க இடம் வழங்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் மத்திய அரசு தெரிவித்தது.  அதே வழக்கில், 22.8 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது என்று தெரிவித்தது.

மத்திய அரசின் தொழிலாளர் துறையிடம், புலம் பெயர் தொழிலாளர்களின் விபரங்கள் உள்ளன.   டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் விபரம், அந்தந்த மாநில அரசுகளிடம் உள்ளன.  குறைதபட்சம், இத்தொழிலாளர்களுக்கான உணவு, இருப்பிடம் போன்றவற்றை உத்தரவாதம் செய்யுமாறு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடம் அறிவுறுத்தியிருந்தாலே, இந்த கொடுமைகளை தவிர்த்திருக்க முடியும். நான்கு மணி நேரத்தில் ஊரடங்கு என்றால் சொந்த ஊரை விட்டு வேறு மாநிலத்தில் கூலி வேலை செய்யும் ஒருவனுக்கு உணவு கிடைக்காது என்பது சாதாரண மனிதனுக்கும் தெரியும் விஷயம்.  இந்த அடிப்படையான விஷயம் கூட மோடிக்கு தெரியவில்லையா அல்லது அக்கறையில்லையா என்பது விவாதத்துக்குரிய விஷயம்.

ஊரடங்கு காரணமாக நாக்பூரிலிருந்து நடந்தே சொந்த ஊருக்கு வந்த நாமக்கல்லை சேர்ந்த 22 வயது இளைஞன் தெலங்கானாவில் இறந்து போனான்.  இது போல பயண வழியில் இறந்தவர்களின் விபரங்கள் முழுமையாக வெளியாகவில்லை.

நாட்டை ஆளும் பிரதமர் இத்தகைய மரணங்களுக்கு காரணமாக இருப்பதோடு அல்லாமல், இது குறித்து எத்தகைய அசூயையும் இல்லாமல் யோகா வீடியோ வெளியிடுவது எத்தனை கொடூரம் ?

வீடே இல்லாமல், கொளுத்தும் வெயிலில் தேசிய நெடுஞ்சாலையில் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்யும் மக்கள் லட்சக்கணக்கில் இருக்கையில் வீட்டில் இருப்பவர்கள் யோகா செய்யுங்கள் என்று மோடி அறிவுரை வழங்குவது எத்தனை குரூரம் ?

இது மட்டும் இல்லை.   இந்த கொரானவை எதிர்கொள்ள முதல் வரிசையில் இருப்பது, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்.   உலகின் பல பகுதிகளில் கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலையர்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர் என்று செய்திகள் வருகின்றன.   இவர்களை பாதுகாக்க போதுமான, தற்காப்பு உபகரணங்கள் மிக மிக அவசியம்.   27 பிப்ரவரி அன்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிவிக்கையில், உலகம் முழுக்க மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள்  (PPE) பற்றாக்குறை ஏற்படும். கொரோனாவால் மட்டும் இல்லை.  பயத்தின் காரணமாக பதுக்கப்படுவதாலும் தட்டுப்பாடுகள் ஏற்படும் என்று அறிவுறுத்தியது.

மோடி அரசு என்ன செய்தது தெரியுமா ?  முதன் முதலாக 21 மார்ச் அன்றுதான், மருத்துவ  பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்வோருக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கைகளை அனுப்பியது. பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் சஞ்சீவ், “ஒரு மாதத்துக்கு முன்னர், 19 பிப்ரவரி அன்று எங்களுக்கு அறிவுறுத்தல் வந்திருந்தால், நாங்கள் தயாராகி இருப்போம். எத்தகைய உபகரணங்கள் வேண்டும் என்ற அறிவிக்கை 24 மார்ச் அன்றுதான் எங்களுக்கு வந்தது.  அரசு கேட்பது போன்ற உபகரணங்கள் (Masks, Gloves, Gowns, etc) தயாரிப்பதற்கான பொருட்கள் (பாலியஸ்டர் துணி, ஸிப்புகள், போன்றவை) தட்டுப்பாடு ஏற்பட்டது.  அரசின் அறிக்கை வந்த அன்றே எங்கள் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கி விட்டனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும், மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களுக்கான தேவை ஒரே நாளில் பல மடங்கு அதிகரித்தது.  இருப்பில் இருந்தவை அனைத்தும் தீர்ந்து விட்டன.  அரசு கேட்பது போன்றவற்றை எங்களால் உடனடியாக தயாரிக்க முடியாத நிலையில் இருக்கிறோம்” என்றார்.

29 மார்ச் அன்று செர்பியா நாட்டில் உள்ள ஐக்கிய நாடுகள் அவை அமைப்பு, இந்தியாவிலிருந்து 90 டன் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வந்து இறங்கியுள்ளது என்று ட்விட்டரில் வெளியிட்டது, மோடி அரசு எவ்வளவு அஜாக்கிரதையாகவும்,  தான்தோன்றித்தனமாகவும் நடந்து கொள்கிறது என்பதை உணர்த்தியது.

The 2nd cargo Boeing 747 with 90t of medical protective equipment landed from India to Belgrade today. The transportation of valuable supplies purchased by @SerbianGov has been fully funded by the #EU while @UNDPSerbia organized the flight & ensured the fastest possible delivery. pic.twitter.com/pMZqV7dwTg

— UNDP in Serbia (@UNDPSerbia) March 29, 2020

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், மத்திய அரசிடம், எங்கள் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்காக மத்திய அரசிடம் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டோம்.  இது வரை ஒரே ஒரு உபகரணம் கூட வரவில்லை என்று கூறியிருப்பது மிகவும் முக்கியமானது.

“We are facing a shortage of PPE kits. We have written to the Centre to supply the kits, essential for our doctors and nurses. But we haven’t received even one PPE kit from the Union government so far”: CM @ArvindKejriwal pic.twitter.com/C3pax3jBv1

— AAP (@AamAadmiParty) April 4, 2020

இதே நிலையில்தான் இந்தியாவில் பெரும்பாலான மாநில அரசுகள் உள்ளன.

மருத்துவர்கள் மற்றும், செவிலியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால், நாளை இந்நோய் இந்தியாவில் அதிக அளவில் பரவுகையில் மருத்துவர்களும், செவிலியர்களும் வேலை செய்ய மறுத்தால் என்ன ஆகும் என்பதை யோசித்து பாருங்கள் ?

இத்தகைய அத்தியாவசிய பணிகளை செய்யாமல், பால்கனியில் கைதட்டுங்கள், விளக்கு பிடியுங்கள் என்று சொல்லும் நபரை என்னவென்று சொல்வீர்கள் ?

ஒரு பிரதமராக, மோடி இந்த பெருநோயின் தாக்கத்தை தணிக்க எந்த நடவடிக்கையையும் இது வரை எடுக்கவில்லை என்பதே உண்மை.

கேரள மாநிலம் காசர்கோட்டிலிருந்து அருகாமையில் 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மருத்துவமனை கர்நாடக மாநிலம் மங்களூரில்தான் உள்ளது.   கொரோனா நோய் காரணமாக கர்நாடக அரசு, மாநில எல்லையை மூடியது.   கேரள முதல்வர், கர்நாடக பிஜேபி முதல்வர் எடியூரப்பாவிடம் வேண்டுகோள் விடுத்தும் எதுவும் நடக்கவில்லை.   இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், தேசிய நெடுஞ்சாலை என்பது எந்த மாநிலத்துக்கும் சொந்தமில்லை.  உடனடியாக மத்திய அரசு தலையிட்டு, மாநில எல்லையை திறந்து விட வேண்டும் என்று மத்திய அரசுக்குத்தான் உத்தரவு பிறப்பித்தது.    இந்த நிலையிலும் மோடி எதுவும் செய்யவில்லை.  கர்நாடக அரசு கேரள உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  உச்சநீதிமன்றம், இரு மாநிலங்களும் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளவும் என்று உத்தரவிட்டது.  இன்று வரை இந்த சிக்கல் தீரவில்லை.

கர்நாடகாவில் இருப்பது பிஜேபி அரசு.  கர்நாடகாவில் உள்ள முன்னாள் பிரதமர் தேவே கவுடா, மனிதாபிமான அடிப்படையில் எல்லையை திறந்து விட வேண்டும் என்றார்.  ஆனால் இது வரை எதுவும் நடக்கவில்லை.

இது ஏதோ கேரளாவின் பிரச்சினை என்று நாம் இருந்து விட முடியாது.   தமிழகத்தின்  ஓசூரில் உள்ளவர்களுக்கு பெங்களூரு நகரம் 50 கிலோ மீட்டர்.  நாளை தமிழர்களுக்கும் எடியூரப்பா எல்லைகளை மூடமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் ?

இரு மாநில சிக்கல்களை தீர்த்து வைக்காத பிரதமர், பிரேசில் நாட்டுக்கும் ஸ்பெயின் நாட்டுக்கும் பேசி, கொரோனாவை ஒழிக்க இணைந்து செயல்படுவோம் என்று கூறுவது எத்தகைய அயோக்கியத்தனம் ?

Had a productive telephone conversation with President @jairbolsonaro about how India and Brazil can join forces against the COVID-19 pandemic.

— Narendra Modi (@narendramodi) April 4, 2020

Spoke on phone to President of the Government of Spain, H.E. Pedro Sanchez. Conveyed my deepest condolences for the tragic loss of life in Spain. We agreed to collaborate in fighting the pandemic. @sanchezcastejon

— Narendra Modi (@narendramodi) April 4, 2020

மாநில முதல்வர்களோடும், சக கேபினட் அமைச்சர்களோடும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்களோடும் விவாதித்து, இந்த கொடிய நோய்தொற்றை எதிர்க்க வேண்டிய பிரதமர், விளையாட்டு வீரர்களோடு விவாதிப்பது குரூரம் இல்லையா ?

ஒரு அரசியல்வாதி சுயமோகியாக இருப்பது இயல்புதான்.  ஆனால் இந்த சுயமோகம் முற்றுகையில் அது மோசமான நோயாக மாறுகிறது. Narcissistic Personality Disorder எனப்படும் இந்நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டு உள்ளார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.  இந்நோய் குறித்து இந்த இணைப்பில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கொரோனா தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்று கேரளா.  அம்மாநிலத்தின் பெரும் வருவாய் அங்கிருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் பணியாற்றுபவர்களாலும், சுற்றுலாவாலும் வருகிறது.  இவை இரண்டும் நின்று விட்டபடியாலும், நோய் பரவல் அதிகரித்திருப்பதாலும் கேரளா கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. கேரளாவுக்கு மத்திய அரசு ஒதுக்கியிருக்கும் நிதி எவ்வளவு தெரியுமா ?  197 கோடி.

இந்த நேரத்தில் 2021ம் ஆண்டு, கும்பமேளா விழா நடத்துவதற்காக உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 375 கோடி ரூபாயை வழங்கும் மோடி கோமாளியா இல்லையா ?

The Finance Ministry approves Rs 375 Crores for ‘Mahakumbh’ in Uttarakhand’s Haridwar in 2021.

— ANI (@ANI) April 4, 2020

கோரோனா தடுப்பு நிதியை ஒருபுறம் வையுங்கள். மாநிலங்களுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையை மத்திய அரசு இது வரை வழங்கவில்லை.   சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை கடுமையாக வீழ்ந்திருந்தாலும், இந்தியாவில் பெட் ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லை.    இதன் மூலம் மட்டுமே ஆயிரக்கணக்கான கோடி வருவாய் மத்திய அரசுக்கு வருகிறது.  ஆனால், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மோடிக்கு அவ்வளவு தயக்கம் இருக்கிறது.

இந்த சூழலில்தான், இரு நாட்களுக்கு முன்பு, காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு பேசுவேன் என்று அறிவித்தார் மோடி. பிரதமர் பேசினால் அது நாடு முழுக்க செய்தியாகப் போகிறது.  இதற்காக முன்னறிவிப்பு கொடுக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.  பண மதிப்பிழப்பு நடவடிக்கை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல்தான் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.   ஆனால் மோடி, நாளை 9 மணிக்கு பேசுகிறேன் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

நாடெங்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.  ஊரடங்கு நீட்டிக்கப்படப் போகிறது என்று பரபரப்பு.   நோய் தொற்றின் தீவிரம் குறித்து பேசப் போகிறார் என்றும் செய்தி.

அன்று காலை 8.40 மணிக்கு மீண்டும் ஒர் ட்வீட்.  இன்னும் சில நிமிடங்களில் உங்களோடு பேசப் போகிறேன் என்று.   இப்படி ஒரு மோசமான சுயமோகியை பார்த்துள்ளீர்களா ?

In a short while from now, at 9 AM, will be sharing a video message for the people of India. Do watch.

— Narendra Modi (@narendramodi) April 3, 2020

மோடியின் உரையை கேட்ட பெரும்பாலானோருக்கு அதிர்ச்சி.  நோயை தடுக்க நடவடிக்கை பற்றி பேசுவார், நிதி உதவி பற்றி பேசுவார் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு மோடி விளக்கை அணைத்து இருளில் 9 நிமிடங்களுக்கு விளக்கை ஏற்ற சொன்னார்.  ஒரு கடைந்தெடுத்த பைத்தியக்காரன் கூட இப்படியொரு நெருக்கடியான நேரத்தில் இத்தகைய யோசனையை சொல்ல மாட்டான்.  ஆனால் மோடி சொன்னார்.  சொன்னதோடு நிற்கவில்லை.  இந்தியாவின் முக்கிய பிரபலங்களை மோடியின் அறிவிப்புக்கு ஆதரவு அளித்து வீடியோ வெளியிட சொல்லி பிரதமர் அலுவலக அதிகாரிகள் நெருக்கடி அளித்தார்கள்.

நாடெங்கும் மாட்டு மூளை கொண்ட சங்கிகள், பிரதமரின் அறிவிப்புக்கு பின்னால் உள்ள “அறிவியல் காரணங்களை” விவரித்து தங்கள் வாட்ஸப் உலகங்களில் பரப்பினார்கள்.   ஞாயிறன்று, 9 மணிக்கு ஏற்கனவே வீதிகளில் மேளமடித்த மக்கள்,  மின்சாரத்தை தங்கள் வீடுகளில் நிறுத்துவார்கள்.  மீண்டும் 9.10க்கு மின்சாரத்தை இயக்குகையில் ஏற்படும் கடுமையான அழுத்தத்தினால் மின் இயக்கிகள், ட்ரான்ஸ்பார்மர்கள் சேதமடையும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்த மின் வாரிய அதிகாரிகள், நாடு முழுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.  இதையும் தாண்டி ஞாயிறு இரவு மின் உபகரணங்களுக்கு சேதம் ஏற்படாது என்று சொல்வதற்கில்லை.

உத்தரப் பிரதேச மின்பகிர்மான கழகம், ஞாயிறு 9 மணி விளக்கணைப்பது தொடர்பாக மின்பொறியாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை.

நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் இத்தகைய நெருக்கடியான ஒரு சூழலில் இது அவசியமா ?  இருளில் விளக்கேற்றுவதால் ஏதாவது ஒரே ஒரு நன்மை விளையப் போகிறதா ?  மோடி கோமாளியா இல்லையா ?

மத்திய அரசின் ஆயுஷ் துறை (ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி) அமைச்சர் ஷ்ரீபத் நாயக் அளித்த ஒரு பேட்டியில், பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.  அவர் ஆயுர்வேத மருத்துவத்தால் குணமானார் என்று கூறினார்.

2 ஏப்ரல் 2020 அன்று, மத்திய அரசு ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது.  அதில், மோடி இங்கிலாந்து இளவரசரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ஆயுர்வேத மருத்துவத்தில் அவர் ஆர்வத்தை பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டது.    மறுநாளே, இங்கிலாந்து அரண்மனை செய்தித் தொடர்பாளர் இளவரசர் சார்லஸ் ஆயுர்வேத மருந்து மூலம் குணமானார் என்பது பொய் என்றும், இங்கிலாந்து மருத்துவர்களால் குணப்படுத்தப்பட்டார் என்பதும் தெரிவிக்கப்பட்டது.

மோடி எத்தனை அற்பர் என்பது தெரிகிறதா ?

டெல்லி பத்திரிக்கையாளர் ஒருவர் மோடியின் நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசினார்

“மோடி தலைமையிலான மத்திய அரசு, கொரோனா சிக்கல் தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கிறது. சீனா, இங்கிலாந்து ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடப்பது என்னவென்பதை அறிந்தும் மோடி அரசு இதை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கத் தவறி விட்டது. 

30, ஜனவரியிலேயே இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டும், அரசு அதை போதுமான தீவரத்தன்மையுடன் அணுக தவறி விட்டது. அரசிடம் இதை எதிர்கொள்ள ஒரு திட்டமோ, தயாரிப்போ இல்லை. 

பிப்ரவரியில் நிலைமை மோசமடைந்ததை கவனியாமல், மோடி அரசு, ட்ரம்ப் கண்களில் குஜராத்தின் சேரிகள் தெரியாமல் இருக்க சுவர்கள் எழுப்புவதில் கவனமாக இருந்தது. 

அரசு மோடியை ஒரு உலகத்தலைவராக சித்தரிக்க முயற்சி செய்துகொண்டிருந்தபோது, அவர் கட்சியினர் டெல்லியில் வகுப்புவாத தீயை எரியவிட்டுக் கொண்டிருந்தனர்.  அரசு மற்றும் ஆளுங்கட்சியின் நோக்கங்கள் வேறாக இருந்தன. 

மார்ச் தொடக்கத்தில் டெல்லி வன்முறை தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டபோது, மோடி அரசு, மக்களின் கவனத்தை திசைதிருப்ப தரவுகளை தேடிக் கொண்டிருந்தது.   மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் பணி மோடிக்கு முக்கியமாக இருந்தது. 

குதிரை பேரத்தில் நிபுணர் என்று அழைக்கப்படும் அமித் ஷா தனது உள்துறை அமைச்சர் பணியை விட ஆட்சிகலை கவனிப்பதிலும், எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதிலும் கவனமாக இருந்தார்.  நாட்டை அச்சுறுத்தும் கொடிய வைரஸ் பரவல் குறித்து மத்திய அரசை எச்சரிக்க வேண்டிய மத்திய உளவுத்துறை, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை மடக்குவதில் முனைப்பாக இருந்தது. 

மாநில அரசுகள், கொரோனாவை எதிர்கொள்ள மத்திய அரசின் வழிகாட்டுதலை எதிர்ப்பார்த்து, ஏமாந்து, வேறு வழியின்றி, தாமாகவே நடவடிக்கை எடுக்கத் தொடங்கின.  மோடியோ, அவர் அமைச்சர்களுக்கோ கொரோனா வைரசின் தீவிரம் புரியவில்லை என்பது தெளிவானது.  சமூக இடைவெளி குறித்து அரசுக்கு அக்கறை இருந்திருந்தால், முதலில் பாராளுமன்றக் கூட்டத்தை ஒத்தி வைத்திருக்க வேண்டும்.  ஆனால் அரசுக்கு இது குறித்த புரிதல் இல்லை என்பதையே அது உணர்த்தியது.  

கேரள அரசு, மத்திய அரசுக்காக காத்திராமல் தன்முனைப்பாக கொரோனாவை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. மோடி அரசு ஊரடங்கு நடவடிக்கைகளை அறிவிக்கும் முன்பே கேரளா அத்தகைய நடவடிக்கைகளை எடுத்தது. 

பல மாநில அரசுகள், சமூக விலகல், ஊரடங்கு நடவடிக்கைகளை எடுத்த பிறகு, மோடி அதற்கு ஜனதா ஊரடங்கு என்று பெயர் கொடுத்தார்.   பாத்திரங்களை அடித்து ஒலியெழுப்பி நன்றி தெரிவிக்கலாம் என்று வினோதமான அறிவுரைகளை வழங்கினார்.    

தொலைக்காட்சிகளில் தோன்றி,  படோடாபமான விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.  

எவ்வித முன்தயாரிப்புமின்றி, மோடி அரசு அறிவித்த 21 நாள் ஊரடங்கு, இந்தியா சந்தித்திராத பேரவலத்துக்கு வழிவகுத்தது. 

இந்த பேரவலத்துக்கு மோடி ஒரு முறை கூட வருத்தம் தெரிவிக்கவில்லை.  மீண்டும் தொலைக்காட்சிகளில் தோன்றிய மோடி, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்கள், ஏழை தொழிலாளர்கள், வறுமையில் உள்ளோர் பற்றி ஒரு வார்த்தை பேசாமல், விளக்குகளை அணைத்து மெழுகுவர்த்தி ஏற்றச்சொல்லும் வினோத யோசனையை அளித்தார்.  மோடி பக்தர்களே இந்த யோசனையை கேட்டு அதிர்ச்சிக்குத்தான் ஆளானார்கள்.

இன்று இந்தியா சந்தித்து வரும் ஒரு மிக நெருக்கடியான சூழலில் கூட மோடி தனது சுய விளம்பரத்தில்தான் அதிக கவனம் செலுத்துகிறார். மோடிக்கு துதிபாடும் ஊடகங்கள், தங்கள் ஆன்மாவை எப்போதோ விற்று விட்டன. 

மோடியை விமர்சிப்பவர்கள், மோடிக்கு ஆட்சி நடத்த தெரியாது.  விளம்பரத்திலும், வெற்று படோடாபத்திலும் மட்டுமே அவர் சிறந்தவர் என்று கூறுவது உண்மையே என்பதை கொரோனா சிக்கல் நிரூபித்துள்ளது” என்றார் அந்த பத்திரிக்கையாளர்.

இந்த நெருக்கடியான நேரத்தில், ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம், மாநில அரசுகளின் செயல்பாடுகள்தான்.  கேரளா, மகாராஷ்டிரா, தமிழகம் என மாநில அரசுகள் மிக சிறப்பான பணிகளை செய்து வருகின்றன.   இம்மாநிலங்களின் முதல்வர்களே, கொரோனாவிலிருந்து நாம் மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறார்கள்.

130 கோடி மக்களைக் கொண்ட நம் நாட்டில் கொரோனா தீவிரமாக பரவினால், மிக அதிகமான உயிர்சேதத்தை நாம் சந்திக்க நேரிடும். ஒரு போரை சந்திக்கும் தீவிரத்தோடும், தயாரிப்பு வேலைகளோடும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டிய இந்தியா, ஒரு கோமாளியை பிரதமராக பெற்றுள்ளது.  இதனால்தான் மொட்டை மாடியில் நின்று கைதட்டிக் கொண்டும், மின்சாரத்தை அணைத்து விளக்கேற்றிக் கொண்டும் இருக்கிறோம்.

மிகப்பெரிய அதிகாரத்தை பெற்றும், மக்களை காக்க வேண்டிய இடத்தில் இருந்தும், சுயமோகியாக கோமாளித்தனத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் மோடிக்கு காலம்தான் உரிய தண்டனையை வழங்க வேண்டும்.

நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

நாள்தொறும் நாடு கெடும்.

ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.

மறுமொழி இடவும்